கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் அமைந்துள்ள கிளின்டன் (Clinton) கிராமப் பகுதியில் பியர் லேக் (Pear Lake) காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
அங்கிருக்கும் அனைத்துக் கட்டடங்கள் மற்றும் வீடுகளையும் உடனடியாகக் காலி செய்யுமாறு அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கியதால் கடந்த ஜூலை 17-ஆம் திகதி உருவானதாகச் சந்தேகிக்கப்படும் இந்த காட்டுத்தீ, தற்பொழுது 4,400 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவிற்குப் பரவியுள்ளது.
இதன் காரணமாகத் தம்ஸன்-நிக்கோலா பிராந்தியப் பகுதியிலுள்ள (Thompson-Nicola Regional District) சுமார் 280 சொத்துகளுக்கும் வெளியேற்ற உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு நிமித்தமாக நெடுஞ்சாலை 97 (Highway 97) மூடப்பட்டுள்ளதாக ட்ரைவ் பிசி (DriveBC) அறிவித்துள்ளது.
வெளியேற்றப்படும் மக்களுக்காக கேம்லூப்ஸ் (Kamloops) நகரில் அமைந்துள்ள மெக்ஆர்தர் ஐலேண்ட் விளையாட்டு மற்றும் நிகழ்வுகள் மையத்தில் (McArthur Island Sport and Events Centre) தற்காலிக வரவேற்பு மையம் அமைக்கப்பட்டடது.
தற்பொழுது காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 53 தீயணைப்பு வீரர்கள், 15 ஹெலிகாப்டர்கள் மற்றும் 19 கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெப்பமான மற்றும் வறண்ட வானிலை காரணமாகத் தீ மேலும் பரவக்கூடும் எனக் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கிராம மக்கள் அனைவரும் அமைதியாகவும், வழிகாட்டுதல்களைப் பின்பற்றிப் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கிளின்டன் கிராமத்தின் மேயர் ரோலண்ட் ஸ்டான்கே (Roland Stanke) கேட்டுக்கொண்டுள்ளார்.
