ஒன்ராறியோ மாகாணத்தில் நிலவும் சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கும் நோக்கில், 2050-ஆம் ஆண்டிற்குள் சுமார் 6,000 புதிய சிறை படுக்கைகளைச் சேர்க்க மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காகப் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
தற்போது மாகாணத்தின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட சுமார் 2,000 பேர் அதிகமாக அடைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற வழக்குகள் தேக்கமடைந்திருப்பது மற்றும் பிணை மறுப்பு போன்ற காரணங்களால் இந்த நெரிசல் அதிகரித்துள்ளதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
“குற்றவாளிகளுக்கு ஆடம்பரமான வசதிகளை நாங்கள் செய்யவில்லை, சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்தச் சிறைகளை உருவாக்குகிறோம்,” என்று முதல்வர் டக் போர்ட் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சிறைச்சாலைகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்குப் பதிலாக, நீதிமன்றக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், போதைப்பொருள் மறுவாழ்வு மற்றும் ஆதரவு மையங்களை உருவாக்கவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறைச்சாலை விரிவாக்கம் என்பது பொதுப்பணத்தை வீணடிக்கும் ஒரு செயல் என ஒட்டாவா பல்கலைக்கழக (University of Ottawa) குற்றவியல் பேராசிரியர் ஜஸ்டின் பிச்சே (Justin Piché) விமர்சித்துள்ளார்.
தற்போதுள்ள சிறைச்சாலைகளில் 80 சதவீதத்தினர் விசாரணைக்காகக் காத்திருப்பவர்கள் (Remand) என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டம் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என அரசு நம்பினாலும், எதிர்க்கட்சிகள் மாற்று வழிகளையே கோருகின்றன.










