165-க்கும் அதிகமான நிறுவனங்களின் கணினித் தரவுகளுக்குள் ஊடுருவி, கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியதாகக் கூறப்படும் கிச்சனரைச் சேர்ந்த கனடியர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒன்ராறியோவின் கிச்சனரைச் சேர்ந்த 26 வயதான Connor Riley Moucka, சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்த சதியில் தனது பங்களிப்பை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில், திருடப்பட்ட login தகவல்களைப் பயன்படுத்தி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இணையச் சேவை நிறுவனத்தின் குறைந்தது 165 வாடிக்கையாளர் நிறுவனங்களின் தரவுகள் சட்டவிரோதமாக அணுகப்பட்டுள்ளன.
வங்கி மற்றும் நிதித் தகவல்கள், சம்பளப் பதிவுகள், சாரதி அனுமதிப்பத்திர எண்கள், கடவுச்சீட்டு எண்கள், சமூகப் பாதுகாப்பு எண்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி தொடர்பான பதிவுகள் உட்பட பில்லியன் கணக்கான முக்கியமான தரவுகள் திருடப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
திருடப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுவதாக நிறுவனங்களை அச்சுறுத்தி, குற்றக் குழுவினர் 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்பட்ட உண்மையான இழப்பு 9.5 மில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குறைந்தது 100 மில்லியன் மக்களின் தகவல்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
கணினி மோசடி, இணைய வழி நிதி மோசடி, அடையாளத் திருட்டு மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை Moucka ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கான தண்டனை 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. அவர் கட்டாயமாகக் குறைந்தது இரண்டு ஆண்டுகளையும், ஏனைய குற்றங்களுக்காக அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையையும் எதிர்கொள்ளக்கூடும்.
கனடாவில் கைது செய்யப்பட்ட Moucka, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த விசாரணைக்கு கனடாவின் RCMP உட்பட பல நாடுகளின் காவல்துறையினர் உதவி வழங்கியுள்ளனர்.










