பிராம்ப்டனில் பதற்றம் – விதிமுறைகளை மீறி பட்டாசு கொளுத்தியதால் சிங்குவாசி பூங்காவிற்கு அவசரமாக பூட்டு!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் உள்ள புகழ்பெற்ற சிங்குவாசி பூங்காவில் (Chinguacousy Park), பாதுகாப்பற்ற முறையில் பெருமளவிலான மக்கள் கூடியதாலும், சட்டவிரோதமாகப் பட்டாசுகள் கொளுத்தப்பட்டதாலும் அப்பூங்கா அவசரமாக மூடப்பட்டுள்ளது.

பிராமலியா (Bramalea) பகுதியில் உள்ள குயின் வீதி கிழக்கு (Queen Street East) மற்றும் பிராமலியா வீதி சந்திப்பில் அமைந்துள்ள சிங்குவாசி பூங்காவில் திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு திரண்டிருந்த மக்கள் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்ததைத் தொடர்ந்து, பீல் பிராந்திய பொலிஸார் (Peel Police) பூங்காவை உடனடியாக மூடி, அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.

பச்சை நிற பிரதிபலிப்பு உடைகளை அணிந்த பொலிஸ் அதிகாரிகள் பூங்காவின் விலங்குப் பண்ணை (Petting zone) பகுதிக்கு அருகில் வரிசையாக நின்று, அங்கிருந்த கூட்டத்தை மெதுவாகப் கலைந்துபோகச் செய்தனர்.

விபத்துக்கள் மற்றும் கைதுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றாலும், ஒரு சில நபர்கள் பூங்காவிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாகப் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டைலர் பெல்-மொரினா (Tyler Bell-Morena) தெரிவித்துள்ளார்.

பிராம்ப்டன் மாநகர விதிமுறைகளின்படி, விக்டோரியா தினம் (Victoria Day) உட்பட எவ்வித பொதுநாட்களிலும் பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பட்டாசுகளைக் கொளுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles