கனடாவில் பல தற்கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆபத்தான இரசாயனத்தை, உக்ரைனைச் சேர்ந்த ஒருவர் இப்போதும் கனடாவிற்குத் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக W5 புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
லியோனிட் ஜகுடென்கோ (Leonid Zakutenko) என அடையாளம் காணப்பட்ட நபர், பல ஆண்டுகளுக்கு முன்பே பிபிசி (BBC) விசாரணையில் அம்பலப்படுத்தப்பட்டவர்.
இப்போதும் அவர் அதே இணையதளம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி ‘தற்கொலை உபகரணங்களை’ (Suicide kits) விற்பனை செய்து வருகிறார்.
கனடாவிற்கு இவ்வாறான பொருட்களைத் தொடர்ந்து அனுப்புவதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சமையல் தேவைக்காகவே இவற்றை விற்பதாக அவர் கூறினாலும், இணையம் ஊடாக வாங்குபவர்களின் நோக்கம் குறித்து அவர் எவ்வித சோதனையும் செய்வதில்லை.
ஏற்கனவே கனடாவைச் சேர்ந்த கென்னத் லோ (Kenneth Law) என்பவர் இதேபோன்ற இரசாயனத்தை விற்றதாகக் கைது செய்யப்பட்டு, 14 தற்கொலைகளுக்குத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்குப் பின்னரும், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கனடாவில் 28 மரணங்கள் இந்த இரசாயனத்தால் நிகழ்ந்துள்ளன.
கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA), 2023 முதல் சுமார் 30 இவ்வாறான பொதிகளை இடைமறித்துள்ளது.
இவ்வாறான விற்பனையாளர்களைத் தடுக்க சர்வதேச அளவில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.
உயிருக்கு ஆபத்தான இவ்வாறான பொருட்கள் இணையம் வழியாக மிக இலகுவாகக் கிடைப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.










