இந்த வசந்த காலத்தில் பெரிய ரொறன்ரோ பகுதி (GTA) மற்றும் ஒண்டாரியோ முழுவதும் மகரந்தத் துகள்களின் (Pollen) அளவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக அதிகரித்துள்ளது.
பொதுவாக வெவ்வேறு காலப்பகுதிகளில் மகரந்தத்தை வெளியிடும் சிடார் (Cedar), மேப்பிள் (Maple) மரங்கள், இந்த ஆண்டு தாமதமாக மகரந்தத்தை வெளியிட்டுள்ளன.
இவை பிர்ச் (Birch), ஓக் (Oak) போன்ற மரங்களுடன் இணைந்து ஒரே நேரத்தில் மகரந்தத்தை வெளியிடுவதால் காற்றில் மகரந்த அளவு சடுதியாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தென்பகுதியிலிருந்து பலத்த காற்றினால் மகரந்தத் துகள்கள் ஒண்டாரியோவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
மேலும், புவி வெப்பமடைதலால் (Global Warming) கடந்த 35 ஆண்டுகளில் கனடாவில் மகரந்த அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
காற்று மாசுபாடு மகரந்தத் துகள்களை மேலும் வீரியமிக்கதாக மாற்றுகிறது. இதனால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் எளிதில் தூண்டப்பட்டு, ஒவ்வாமை (Allergies) அறிகுறிகள் தீவிரமடைகின்றன.
தெற்கு ஒண்டாரியோவில் வின்ட்சர் (Windsor), ஹாமில்டன் (Hamilton), பாரி (Barrie), மற்றும் கிங்ஸ்டன் (Kingston) ஆகிய நகரங்கள் ஒவ்வாமையால் அதிகம் பாதிக்கப்படும் முதல் 5 இடங்களுக்குள் உள்ளன. ரொறன்ரோ 10-வது இடத்தில் உள்ளது.
இதிலிருந்து தற்காப்பு பெறுவதற்கு அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை மகரந்தத் துகள்கள் பூமியில் அதிகம் தங்குவதால், அந்த நேரத்தில் ஜன்னல்களை மூடி வைப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.
வெளியில் சென்று வந்தவுடன் குளிப்பது, படுக்கை விரிப்புகளை அடிக்கடி மாற்றுவது மற்றும் வீட்டில் HEPA வடிகட்டிகளைப் பயன்படுத்துவது பாதிப்பைக் குறைக்கும்.
உங்களுக்கு எவ்வகையான மகரந்தத்தினால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை மருத்துவர் மூலம் கண்டறிந்து, உரிய காலத்திற்கு முன்னரே மருந்துகளை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.










