ஒண்டாரியோவின் பேர்ர்த் (Perth) நகரில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாகத் ஒட்டாவாவைச் சேர்ந்த இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் இருக்கலாம் என ஒண்டாரியோ மாகாண பொலிஸார் (OPP) எச்சரித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி, பேர்ர்த் நகரில் உள்ள Last Duel Park-இல் கிரிஸ்டோ அலிசன் ரிச்சர்ட்ஸ் (Christo Allison Richards) என்பவர் படுகாயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இக்கொலை வழக்கில் இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜோசப் மடோர் (Joseph Madore – 34) மற்றும் பிரைடன் கென்னடி (Brayton Kennedy – 28) ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஜோசப் மடோர் தற்போது பி.சி.-யில் இருக்கலாம் என்றும், அவருக்கு ரிச்மண்ட் (Richmond), அபோட்ஸ்போர்ட் (Abbotsford), சில்லிவாக் (Chilliwack) மற்றும் டெரஸ் (Terrace) பகுதிகளில் தொடர்புகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
பிரைடன் கென்னடி அவருடன் பயணிக்கலாம் அல்லது ஒட்டாவா (Ottawa) பகுதியிலேயே இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மடோர் கறுப்பு நிறத் தலைமுடி மற்றும் பச்சைக் குத்தல்களைக் கொண்டவர்.
கென்னடி தனது இடது புருவத்திற்கு மேல் நெற்றியில் பச்சைக் குத்தியுள்ளார்.
இவர்களைக் கண்டால் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் அணுக வேண்டாம் என்றும், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் Lanark County OPP அல்லது Crime Stoppers அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம்.










