சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை சாதகமாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக றொரண்டோவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ நிதிச் சேவைகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (FSRA) $210,000 ஹெரால்ட் கெர்ஸ்டெல் (Harold Gerstel) மற்றும் அவரது மனைவி எஸ்தர் கெர்ஸ்டெல் (Esther Gerstel) ஆகியோருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கும் விரைவாகக் கடன் பெற்றுத் தருவதாக ஹெரால்ட் தனது நகைக்கடை மற்றும் அடமான நிறுவன விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளார்.
இவ்வாறு வரும் வாடிக்கையாளர்களைத் தனது மனைவியின் உரிமம் இல்லாத நிறுவனத்திற்குத் திருப்பிவிட்டு, அங்கு 22 சதவீதம் முதல் 56 சதவீதம் வரையிலான மிக அதிக வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அதிக வட்டி மற்றும் மறைமுகக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் பல வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
உரிமம் இல்லாத நிறுவனத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டதால், வாடிக்கையாளர்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்காமல் போனதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹெரால்ட் கெர்ஸ்டெல் (Harold Gerstel), தான் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டதாகவும், வங்கிகளில் கடன் கிடைக்காதவர்களுக்குத் தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.










