கனடாவில் காலநிலை வெப்பமடைந்து வருவதால், உண்ணிகளின் (Ticks) நடமாட்டம் முன்கூட்டியே அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் உண்ணி சீசன், இந்த ஆண்டு பல மாகாணங்களில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
குறிப்பாக கறுப்பு-கால் உண்ணிகளின் (Black-legged ticks) கடியால் பரவும் லைம் நோய் (Lyme disease) குறித்து அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் அலிசன் பல்கலைக்கழக (Mount Allison University) பேராசிரியர் வெட் லாயிட் (Vett Lloyd) கூறுகையில், கடந்த குளிர்காலத்தில் பெய்த கடும் பனி ஒரு போர்வை போலச் செயல்பட்டு, மண்ணுக்கு அடியில் உண்ணிகள் அழியாமல் பாதுகாத்துள்ளதால் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
உண்ணிக் கடியால் லைம் நோய் மட்டுமன்றி அனாபிளாஸ்மோசிஸ் (Anaplasmosis), பேபிசியோசிஸ் (Babesiosis) போன்ற நோய்களும் பரவ வாய்ப்புள்ளது.
அதிக சோர்வு, மூட்டு வலி, நரம்பு வலி மற்றும் முகத் தசைவாதம் (Paralysis) போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும் என வைத்தியர் ஐசக் போகோச் (Dr. Isaac Bogoch) எச்சரித்துள்ளார்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் தினமும் உண்ணிகள் உடலில் ஒட்டியுள்ளதா எனச் சோதிப்பதை (Tick checks) ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுமாறு நோவா ஸ்கோஷியாவைச் (Nova Scotia) சேர்ந்த சமூக ஆர்வலர் டோனா லுகர் (Donna Lugar) அறிவுறுத்தியுள்ளார்.










