இணையதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பெறப்படும் தவறான மருத்துவத் தகவல்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
இவற்றை பின்பற்றி நோயாளிகள் தங்களைத்தாங்களே பாதிப்புக்குள்ளாக்குவது அதிகரித்துள்ளதாக கனடிய மருத்துவ சங்கம் (Canadian Medical Association – CMA) கவலை வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, 97 சதவீத மருத்துவர்கள், இணையதளத் தகவல்களை நம்பி தவறான முடிவெடுத்த நோயாளிகளைக் காப்பாற்றத் தலையிட வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் நிலவும் கடும் மருத்துவர் தட்டுப்பாடே (சுமார் 23,000 குடும்ப மருத்துவர்கள் தேவை) நோயாளிகள் கூகுள் (Google) மற்றும் சேட்ஜிபிடி (ChatGPT) போன்ற தளங்களை நாடக் காரணம் என Dr. Margot Burnell தெரிவித்துள்ளார்.
முறையான பரிசோதனை இன்றி இணையத் தகவல்களை மட்டும் நம்பி சுயமாக மருந்து உட்கொள்வது அல்லது நோயின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, இணைய வழி மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவோருக்குச் சுய-பாதிப்பு (Self-harm) ஏற்படும் அபாயம் 5 மடங்கு அதிகம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவத் தகவல்களைப் பெறும்போது அது நம்பகமான தளமா என்பதை உறுதிப்படுத்துமாறும், டிஜிட்டல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதிக்க மருத்துவச் சங்கம் திட்டமிட்டுள்ளது.
