ஓட்டிசம் (Autism) பாதிப்புடைய ஏழு வயது கனடியச் சிறுமி ஒருவர், கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் அவரது தாயாருடன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Ayla Lucas என்ற அந்தச் சிறுமியும், அவரது தாயார் Tania Warner-உம் அநியாயமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சிறுமியின் தந்தை Edward Warner தெரிவித்துள்ளார்.
டெக்சாஸின் Raymondville பகுதியில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, Kingsville-இல் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, Sarita எல்லைச் சாவடியில் வைத்து இவர்கள் மறிக்கப்பட்டனர்.
டானியா தகுந்த விசா மற்றும் பணி அனுமதிப்பத்திரங்களைச் சமர்ப்பித்த போதிலும், அவர்களின் கைரேகைப் பதிவுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் காவலில் எடுக்கப்பட்டனர்.
டானியா கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருவதுடன், நிரந்தர வசிப்பிட உரிமைக்கும் (Green Card) விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்கள் இருவரும் McAllen-இல் உள்ள Rio Grande Valley Central Processing Center-இல் (Ursula என அழைக்கப்படும் முகாம்) வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம் மோசமான வசதிகளுக்குப் பெயர் பெற்றது. “அங்கு குளிரைத் தாங்க விண்வெளிப் போர்வைகளைப் (Space blankets) பயன்படுத்துவதாகவும், தரையில் உள்ள பாய்களைப் போர்த்திக்கொள்வதாகவும்” எட்வர்ட் வேதனை தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பாட்டி Heather Fleck பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து (B.C.) பேசுகையில், இந்தச் சம்பவம் சிறுமிக்கு பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
கனடிய வெளியுறவுத் துறை (Global Affairs Canada – GAC) இந்தச் சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சிறுமியின் தந்தை தற்போது சட்ட உதவியை நாடியுள்ளதுடன், நிதியுதவிக் பிரச்சாரத்தையும் (GoFundMe) தொடங்கியுள்ளார்.
கனடிய குடிவரவு சட்டத்தரணி Richard Kurland, அமெரிக்கா-கனடா இடையிலான தற்போதைய பதற்றமான சூழலில் இந்தச் சிறுமி ஒரு “பகடைக்காயாக” பயன்படுத்தப்படலாம் என கவலை தெரிவித்துள்ளார்.










