கனடா முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் (ER) மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதோடு, சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் அவல நிலை உருவாகியிருக்கிறது.
Kingston Health Sciences Centre (KHSC) மற்றும் Ottawa போன்ற பகுதிகளில் நோயாளிகள் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சேமிப்பு அறைகளில் தங்க வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Ontario-வில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளி ஒருவர் படுக்கை வசதி பெற சராசரியாக 20 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
கனடிய மருத்துவ சங்கத்தின் (CMA) தலைவர் Dr. Margot Burnell, முறையான ஆரம்ப சுகாதார வசதிகள் இல்லாததே அவசர சிகிச்சை பிரிவுகளில் கூட்டம் அதிகரிக்கக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) தரவுகளின்படி, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவில் 1,000 பேருக்கு வெறும் 2.5 படுக்கைகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலை நீடித்தால் அறுவை சிகிச்சைகளும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
தசாப்தங்களாகத் தொடரும் இந்த நெருக்கடியைத் தீர்க்க உடனடித் தீர்வு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.










