Toronto-வில் இரண்டு வயதைக் கூட எட்டாத குழந்தை ஒன்று 19வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தற்போது 18 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
North York-இல் உள்ள 50 Graydon Hall Drive உயர்மாடிக் கட்டடத்தில் வசித்து வந்த குடும்பத்தின் குழந்தை, கடந்த மே மாதம் 10ஆம் திகதி வீட்டின் படுக்கையறையில் இருந்தபோது, ஜன்னல் கண்ணாடி உடைந்து 19வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் Ontario Superior Court of Justice-ல் 18 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் பாதுகாப்பற்றதாக இருந்ததாகவும், போதுமான பாதுகாப்பு பூட்டுகள் பொருத்தப்படவில்லை என்றும் குடும்பத்தினர் வழக்கில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு முன்னரும் இதே கட்டடத்தில் ஜன்னல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்றும், அவை குறித்து கட்டட உரிமையாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் குடும்பத்தினர் நியமித்த கண்ணாடி நிபுணர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய முயன்றபோது, அதற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குழந்தையின் மரணத்தை நேரில் கண்ட பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கும் உளவியல் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளதாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










