பிராம்ப்டனில் உள்ள ஹார்ட் லேக் கன்சர்வேஷன் ஏரியாவில் (Heart Lake Conservation Area), சனிக்கிழமை இரவு படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க நபர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில், படகு கவிழ்ந்ததாகவும், அதில் இருந்த இருவரும் ஆபத்தில் இருப்பதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், நீரில் தத்தளித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்குக் குளிரினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உயிர் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன அந்த நபரைத் தேட இரவு முழுவதும் பொலிஸாரின் விமானப் படை பிரிவினர் அதிநவீன வெப்பம் உணரும் (Thermal imaging) கேமராக்களைப் பயன்படுத்தித் தேடியும் கிடைக்கவில்லை.
இறுதியாக ஞாயிற்றுக்கிழமை மதியம் நீருக்கடியில் தேடும் குழுவினரால் அவரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த கன்சர்வேஷன் பகுதி தற்போது மூடப்பட்டுள்ளதால், அங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், படகு சவாரி செய்யக் கூடாத காலப்பகுதி இது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரிடமும் உயிர்காக்கும் அங்கிகள் (Life jackets) இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் மர்மமாகவும், விசித்திரமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட பொலிஸார், இதில் முறைகேடுகள் ஏதும் நடந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










