மொன்றியலை (Montreal) நோக்கி வந்த இரண்டு சர்வதேச விமானங்கள் “பாதுகாப்பு அச்சுறுத்தல்” காரணமாக CF-18 மற்றும் F-16 போர் விமானங்களின் பாதுகாப்புடன் நேற்று புதன்கிழமை தரையிறக்கப்பட்டன.
வட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பான Norad, இந்த விமானங்கள் பத்திரமாகத் தரையிறங்கும் வரை அவற்றைக் கண்காணித்து வழிநடத்தியது.
Trudeau International Airport-இல் விமானங்கள் தரையிறங்கியதும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களை கியூபெக் மாகாண பொலிஸார் (SQ) கைது செய்துள்ளனர்.
இவர்கள் “மோசடி” தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் Béatrice Dorsainville தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ஒரு விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பெட்டி காரணமாக ஒரு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை காரணமாக அமெரிக்காவின் FAA அமைப்பு மொன்றியலுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் சில மணிநேரம் நிறுத்தி வைத்தது.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெட்டியால் அச்சுறுத்தல் ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டு, விமான நிலையச் சேவைகள் வழமைக்குத் திரும்பின.
இந்தச் சம்பவத்தால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்கள் கணிசமாகத் தாமதமடைந்தன.










