இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டதன் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் “தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” (Tamil Genocide Remembrance Day) நிகழ்வுகள் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களாலும், கனடிய தமிழ் அமைப்புகளாலும் இன்றைய தினம் மே 18, 2026 மிகவும் உணர்வெழுச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT – National Council of Canadian Tamils) மற்றும் பல்வேறு உள்ளூர் அமைப்புகளால் ஒண்டாரியோ மாகாணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஸ்காபரோவின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு (Scarborough Vigil) ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கத்தில் (Albert Campbell Square, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், உயிரிழந்த பொதுமக்களுக்காக பொதுச்சுடர் ஏற்றல், மலர் தூவி அஞ்சலி செலுத்துதல், நினைவேந்தல் உரைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிப்பு என்பன இடம்பெறவுள்ளன.
அதேபோல், பிராம்ப்டன் நினைவேந்தல் சிங்குவாசி பூங்கா – தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி வளாக்கத்தில் (Chinguacousy Park, 9050 Bramalea Rd, Brampton, ON L6S 6G7) நடைபெறவுள்ளது.
இன்று காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் பிராம்ப்டன் மாநகர சபையின் ஆதரவோடு இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி’ (Tamil Genocide Monument) முன்பாக ஒன்று திரண்டு மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
கனடிய நாடாளுமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தின்படி, மே 18 ஆம் திகதி தேசிய அளவில் ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக’ அங்கீகரிக்கப்பட்டு, கனடியப் பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுடன் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
றொரண்டோ மாநகர சபை (Toronto City Hall) மற்றும் ஒண்டாரியோவின் பல்வேறு நகரங்களின் உள்ளூராட்சி சபைகளின் (Civic Centres) முகப்புகளில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூர்ந்து இன்று கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
மேலும், ஒண்டாரியோ மாகாணத்தில் மே 18 உடன் நிறைவடையும் வாரம் “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” (Tamil Genocide Education Week) எனக் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், இது தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் வரலாற்றுப் பயிலரங்குகள் கடந்த ஒரு வாரமாக கனடாவில் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.










