கடந்த வாரம் ஒன்ராறியோ சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது, லிபரல் கட்சி உறுப்பினர் ஸ்டெபானி ஸ்மித்தை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதற்காக முதல்வர் டக் போர்ட் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் குறித்து ஸ்மித் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த டக் போர்ட், “ஸ்மித் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பணியாற்றிய CP24 ஊடகம் அவரை விரும்பாததால்தான் அவர் இங்கு (சட்டசபைக்கு) வந்துள்ளார்” என்று தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்.
முதல்வரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும், சபையில் மன்னிப்புக் கேட்க அப்பொழுது அவர் மறுத்துவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஸ்மித், முதல்வர் தன்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்டதாகவும், அதைத் தான் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைக்குள் நுழையும் போது மக்களின் நலனுக்காகச் சிறந்த முறையில் செயல்பட வேண்டியது அனைவரினதும் கடமை என்று ஸ்மித் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
