றொரண்டோவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த தாய் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவத்தின் குற்றவாளியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு மே 15 அன்று, 35 வயதான கேண்டிஸ் ‘ரோஷல்‘ பாப் (Candice ‘Rochelle’ Bobb) என்பவர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஜான் கார்லண்ட் பொலிவார்ட் (John Garland Boulevard) பகுதியில் மர்ம நபரால் சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து மருத்துவமனையில் அவருக்கு அவசரப் பிரசவம் (C-section) செய்யப்பட்டு ஆண் குழந்தை காப்பாற்றப்பட்டது.
எனினும், சில நிமிடங்களில் கேண்டிஸ் உயிரிழந்ததுடன், அவரது மகன் கைரி (Kyrie) மூன்று வாரங்களின் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
பத்தாண்டுகளாகியும் இந்த வழக்கில் எவரும் கைது செய்யப்படவில்லை.
தற்போது, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் (Shell casings) மூலம் விரல் அடையாளங்கள் அல்லது டிஎன்ஏ (DNA) விபரங்களைப் பெறக்கூடிய புதிய அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவும் விபரங்களை வழங்குவோருக்கு அறிவிக்கப்பட்ட 50,000 டொலர் வெகுமதி இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
“குற்றவாளியின் பெயர் தெரியாதவரை நாங்கள் ஒரு நிழலைத் தேடுவது போல உள்ளது” என றொரண்டோ பொலிஸின் தேடப்படாத குற்றப்பிரிவு (Cold Case Unit) அதிகாரி ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) கவலை வெளியிட்டுள்ளார்.










