கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாய்வானுக்குப் பயணம் மேற்கொள்வது சீனா-கனடா உறவுகளின் “சிவப்பு கோட்டை” (Red line) மீறும் செயல் என கனடாவிற்கான சீன தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் வெளியுறவு அமைச்சரான மைக் சங் (Michael Chong), தாய்வான் தலைவர்களை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.
சீன தூதுவரின் எச்சரிக்கைக்குப் பதிலடியாகவும், கனடாவின் இறையாண்மையை நிலைநாட்டவும், தாய்வான் ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கவும் இப்பயணத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயல் ஒட்டாவாவின் ‘ஒரே சீனா‘ (One China Policy) கொள்கைப்பாட்டிற்கு எதிரானது என சீன தூதரகம் கூறியுள்ளது.
முன்னதாக, சீன தூதுவர் வாங் டி (Wang Di) நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாய்வான் பயணம் இருநாட்டு வர்த்தகத்தைப் பாதிக்கலாம் என எச்சரித்திருந்தார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெய்ஜிங்கிற்குச் சென்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் (Xi Jinping) சந்தித்திருந்தார்.
அப்போது, தாய்வான் சுதந்திரம் என்பது “நெருப்பும் நீரும்” போல ஒன்றிணைய முடியாதது என்றும், இதில் தவறான அணுகுமுறை ஏற்பட்டால் அமெரிக்கா-சீனா இடையே மோதல்கள் வெடிக்கலாம் என்றும் ஷி ஜின்பிங் எச்சரித்திருந்தார்.
கடந்த ஜனவரியில் கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சீனாவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்திருந்தார்.
இந்தச் சூழலில், மைக் சிங்கின் பயணம் இந்த வர்த்தக உறவை பாதிக்கலாம் என்ற கவலை எழுந்துள்ள போதிலும், கனடா ஒரு கொள்கை ரீதியான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பீட்டர் மெக்கே (Peter Mackay) ஆதரவு தெரிவித்துள்ளார்.
கனடா ஒரு சுதந்திர நாடு என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கு பயணிக்க வேண்டும் என்று வெளிநாட்டு அரசாங்கம் கட்டளையிட முடியாது என மைக் சங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.










