ஒன்ராறியோ மாகாணத்தில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் $6.4 பில்லியன் டொலர் புதிய நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுதேச கல்வி நிறுவனங்களின் (Indigenous Institutes) நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் நான்கு ஆண்டுகளில் கூடுதலாக $6.4 பில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் ஆண்டு செயல்பாட்டு நிதி $7 பில்லியன் டொலராக உயரும். இது மாகாண வரலாற்றில் மிக உயர்ந்த தொகையாகும்.
மேலும், 70,000 புதிய கல்வி இடங்களை உருவாக்க வழிவகுக்கும்.
2026 இலையுதிர் காலம் முதல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கல்விக்கட்டணத்தை ஆண்டுக்கு 2 சதவீதம் வரை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது கனடாவிலேயே மிகக் குறைவான கட்டண உயர்வாகும்.
குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்குக் கூடுதல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர் கடன் உதவித் திட்டமான OSAP, மற்ற மாகாணங்களுக்கு இணையாக மாற்றியமைக்கப்படுகிறது.
இனி மாணவர்கள் பெறும் நிதியில் அதிகபட்சம் 25 சதவீதம் மானியமாகவும், குறைந்தபட்சம் 75 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும். தனியார் தொழில் கல்லூரிகளுக்கு இனி மானியம் வழங்கப்படாது.
தொழிலாளர் சந்தையின் தேவைக்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்துவதும், ஒன்ராறியோவின் பொருளாதாரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் இந்த வரலாற்று முதலீட்டை வரவேற்றுள்ளனர்.










