மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் ஈரான் போர் விவகாரத்தில், கனடா எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமை (Neutral) வகிக்க வேண்டும் என 67 சதவீத கனடியர்கள் விரும்புவதாக Leger நிறுவனத்தின் புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
சுமார் 1,608 கனடியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெறும் 25 சதவீதத்தினர் மட்டுமே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கனடா ஆதரவு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இந்தப் போரினால் கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என 70 சதவீதத்தினரும், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் என 91 சதவீதத்தினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, 58 சதவீத கனடியர்கள் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய ஈரான் போரை எதிர்க்கின்றனர்.
இருப்பினும், ஒரு நேட்டோ (NATO) உறுப்பினர் தாக்கப்பட்டால் கனடா தனது படைகளை அனுப்ப வேண்டும் என 60 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், போரினால் ஏற்படும் உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டைப் போக்க கனடா தனது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என 75 சதவீத கனடியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசாங்கத்திற்கு இந்த மக்கள் விருப்பம் ஒரு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் Andrew Enns தெரிவித்துள்ளார்.










