உயிர்கொல்லி ஹான்டா வைரஸ் (Hantavirus) அச்சுறுத்தல் நிலவிய உல்லாசக் கப்பலில் இருந்து வெளியேறிய நான்கு கனடியர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தை வந்தடையவுள்ளனர்.
MV Hondius என்ற கப்பலில் பயணம் செய்த இந்த நான்கு பேரும், மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
அவர்களுடன் தனிமைப்படுத்தல் அதிகாரி ஒருவரும் வருகை தருவார்.
இவர்கள் மாகாணத்தை வந்தடைந்ததும் 42 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.
தற்போது இவர்களிடம் நோய்க்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி (Dr. Bonnie Henry) உறுதிப்படுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தல் காலத்தில் இவர்கள் பொதுமக்களுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.
இவர்களை உள்ளூர் பொதுச் சுகாதாரக் குழுவினர் தினசரி கண்காணிப்பார்கள்.
இந்த வைரஸ் பரவல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐந்து பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பொதுவாக எலிகளின் கழிவுகள் மூலம் பரவக்கூடியது; எனினும் அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கு இடையிலும் பரவ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தச் செய்தி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், இதனைப் பாதுகாப்பாகக் கையாளும் திறன் மாகாணத்திடம் உள்ளதாக டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான அச்சுறுத்தலைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை உறுதியளித்துள்ளது.
