ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு – மூவர் கைது!

ஸ்கார்பரோவில் உள்ள மூன்று ஜி.ஓ (GO) ரயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்களில் இடம்பெற்ற தொடர் வாகனத் திருட்டுகள் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 16 அன்று எக்லிங்டன் ஜி.ஓ (Eglinton GO) நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, வாகனங்களைத் திருட முயன்றபோது சந்தேக நபர்கள் பொலிஸாரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.

அதிநவீன கீ-புரோகிராமிங் (Key-programming) சாதனங்களைப் பயன்படுத்தி, பூட்டப்பட்ட வாகனங்களைத் திறந்து அவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் றொரண்டோவைச் சேர்ந்த Raju Saydur, Nafees Hasan மற்றும் Sazzad Ali என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கும் கில்ட்வுட் (Guildwood GO) மற்றும் ரூஜ் ஹில் (Rouge Hill GO) நிலையங்களில் நடந்த திருட்டுகளுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ரயில் நிலையங்களில் கடந்த ஜனவரி முதல் 16-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக ரூஜ் ஹில் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் வாகனங்களை நிறுத்திவிட்டு ரயிலில் பயணிப்போர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் திருட்டு, வாகன அடையாள எண்ணை மாற்றியமைத்தல் மற்றும் திருட்டிற்கான கருவிகளை வைத்திருத்தல் போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles