ஹால்டன் ஹில்ஸ் (Halton Hills) பகுதியில் பணப்பைகளைத் திருடும் கும்பல் குறித்து பொலிஸார் காணொளி ஆதாரங்களுடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அங்குள்ள பிரபல வர்த்தக மையமான றொரண்டோ பிரீமியம் அவுட்லெட்ஸில், வாடிக்கையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பி இவர்கள் கைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை திருடியுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 45 திருட்டுச் சம்பவங்கள் இந்தப் பகுதியில் பதிவாகியுள்ளன.
2025 நவம்பர் முதல் தற்போது வரை 70க்கும் மேற்பட்ட கைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கும்பல் குழுவாகச் செயல்படுகின்றனர். ஒருவர் வாடிக்கையாளரிடம் பேச்சுக்கொடுத்தோ அல்லது துணிகளைக் காட்டியோ கவனத்தைத் திசைதிருப்ப, மற்றொருவர் மிக லாவகமாகப் பாக்கெட்டில் உள்ள கைபேசியைத் திருடிவிடுகிறார்.
ஏப்ரல் 11 அன்று நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்தின் காணொளியைப் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 22 அன்று நடந்த திருட்டுத் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த 35 வயது ஆடவர் ஒருவரும், மொன்றியலைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்கும்போது கைபேசிகளை மேலங்கிப் பைகளில் (Jacket pockets) வைப்பதைத் தவிர்க்குமாறும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 11 காணொளியில் உள்ள சந்தேக நபர்களைப் பற்றித் தெரிந்தால் உடனடியாக ஹால்டன் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.










