றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) நிலவி வந்த இந்த பருவத்தின் முதலாவது கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு விடுக்கப்பட்டிருந்த பலத்த இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை (Severe thunderstorm yellow watch) தற்பொழுது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, யோர்க் (York Region), பீல் (Peel Region) மற்றும் ஹால்டன் (Halton Region) ஆகிய பகுதிகள் இந்த எச்சரிக்கை வளையத்திற்குள் இருந்தன.
கடந்த இரண்டு நாட்களாக 30 பாகை செல்சியஸைத் தாண்டி பதிவாகிய கடும் வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலையை அடுத்து, கனடா சுற்றுச்சூழல் அமைச்சகம் (Environment and Climate Change Canada) இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்த பலத்த புயல் மற்றும் மழையானது லேக் ஹுரோன் (Lake Huron) கடற்கரையோரங்கள் மற்றும் தென்மேற்கு ஒன்டாரியோ (Southwestern Ontario) பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது இந்த எச்சரிக்கைகள் யாவும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் வெப்பநிலை 15 பாகை செல்சியஸ் வரை பெருமளவில் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்ச்சியான வானிலை வார இறுதி வரை நீடிக்கும் என்றும், அடுத்த வாரம் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
