மெக்சிகோ பிரமிட் பகுதியில் துப்பாக்கிச் சூடு – கனடியப் பெண் உயிரிழப்பு – சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

மெக்சிகோவில் (Mexico) உள்ள உலகப் புகழ்பெற்ற தியோதிஹுவாகன் (Teotihuacán) தொல்பொருள் ஆய்வு மையத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனடியப் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தியோதிஹுவாகன் (Teotihuacán) பகுதியில் உள்ள ‘நிலா பிரமிட்’ (Pyramid of the Moon) அருகே நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் ஒரு கனடியப் பெண் உயிரிழந்ததுடன், மற்றொரு கனடியர் காயமடைந்துள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த வெளிநாட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க தூதரகங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக மெக்சிகோ வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இந்தக் கோடையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவேற்க மெக்சிகோ தயாராகி வரும் வேளையில், இந்தத் துப்பாக்கிச் சூடு அந்நாட்டின் பொதுப் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

 

Related Articles

Latest Articles