மிசிசாகாவின் (Mississauga) பிப்த் லைன் (Fifth Line) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை பயங்கர தீ விபத்தொன்று பதிவானது.
இதில் சிக்கிய தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற நபர் ஒருவர் தீயையும் கரும்புகையையும் பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் குதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 வயதுடைய அந்த நபர் வீட்டிற்கு வந்தபோது, வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உள்ளே இருந்த தனது 80 வயது தாய் மற்றும் 40 வயது சகோதரரைக் காப்பாற்ற பலமுறை வீட்டிற்குள் ஓடியுள்ளார்.
பின்னர் அடர்ந்த புகையினால் அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை, அண்டை வீட்டார் அவரை இழுத்து வந்து காப்பாற்றினர்.
ஜெப் (Jeff) மற்றும் அவரது மகன் கோல் (Cole) ஆகியோர் உடனடியாக 911 இற்கு அழைப்பு விடுத்ததுடன், ஜன்னல்களை உடைத்து உள்ளே இருப்பவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
“புகையினால் எதனையுமே பார்க்க முடியவில்லை” என அவர்கள் அந்த அதிர்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், வீட்டிற்குள் மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு முதலுதவி அளித்தனர். தற்போது மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் (Stable condition) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறை அதிகாரி டேனியல் போயர் (Daniel Boyer), ஆபத்தான சூழலில் உயிரைப் பொருட்படுத்தாமல் அண்டை வீட்டார் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சியைப் பாராட்டியுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.










