ஒன்ராறியோ மாகாணத்தில் மளிகைப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளன.
இந்நிலையில், ‘சர்வைலன்ஸ் பிரைசிங்’ (Surveillance pricing) எனும் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி மளிகைப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் முறையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் டக் போர்ட் (Doug Ford) நிராகரித்துள்ளார்.
மனிடோபா (Manitoba) மாகாணம் இத்தகைய ‘முன்னெச்சரிக்கை’ தடையை நடைமுறைப்படுத்தினாலும், டக் போர்ட் அதை ஒரு சுதந்திர சந்தை பொருளாதாரத்திற்கு (Free-market economy) எதிரானது என்று கூறியுள்ளார்.
விலை நிர்ணயத்தில் நிறுவனங்களுக்கு இடையே கூட்டுச்சதி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆனால் சந்தைப் போட்டியே விலையைக் குறைக்கச் சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மளிகைப் பொருட்களின் விலையைக் குறைக்க றொரண்டோ நகரம் முன்னெடுத்துள்ள, நகரத்தால் நடத்தப்படும் மலிவு விலை மளிகைக் கடைக்கான முன்னோடித் திட்டத்தை (Pilot project), முதல்வர் டக் போர்ட் மிகவும் “பைத்தியக்காரத்தனமான” (Craziest idea) திட்டம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது சோசலிசப் போக்கு என்றும், அரசு இத்தகைய வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை நிர்ணய முறையைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மரிட் ஸ்டைல்ஸ் (Marit Stiles) மற்றும் ஜான் பிரேசர் (John Fraser) வலியுறுத்தியுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் தேடல் வரலாறு மற்றும் தனிப்பட்ட தரவுகளை வைத்து விலையை உயர்த்துவது நுகர்வோரைப் பாதிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மளிகைப் பொருட்களின் விலை உயர்வுக்குப் போக்குவரத்துச் செலவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் (Gas prices) முக்கியக் காரணம் என்று டக் போர்ட் கூறியுள்ளார்.
