பிராம்ப்டன் (Brampton) நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் தாயும் மகளும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
ஸ்டீல்ஸ் அவென்யூ (Steeles Avenue) மற்றும் ஹுரோண்டாரியோ வீதி (Hurontario Street) சந்திப்பிற்கு அருகிலுள்ள ஹம்மிங்பேர்ட் கோர்ட் (Hummingbird Court) பகுதியில் உள்ள குடியிருப்பிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சுமார் 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police), பலத்த கத்திக் காயங்களுடன் இருந்த இரு பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 70 வயதுடைய தாய் என்றும், மற்றவர் 50 வயதுடைய அவரது மகள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திலேயே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையே முன்னரே பழக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட ரீதியிலான மோதல் என்பதால், பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










