கனடாவின் பிக்கரிங் நகரில் 83 வயது மூதாட்டி எலினோர் டோனி (Eleanor Doney) என்பவரை, கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 14 வயது வாலிபர் தற்போது முதலாம் நிலை கொலைக் குற்றத்தை (1st-degree murder) ஒப்புக்கொண்டுள்ளார்.
2025 மே மாதம் தனது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது குறித்த மூதாட்டி கொலைச் செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த இளைஞர் கொலை செய்வதற்கு முன்னரே பல வாரங்களாகவே வன்முறை எண்ணங்களை வளர்த்து வந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தொடர் கொலையாளிகள், உளவியல் கோளாறுகள் குறித்துத் தீவிரமாகத் தேடியதும், ஒரு அனிமே (Anime) கதாபாத்திரத்தைப் போலச் செயல்பட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மே 29, 2025 அன்று, தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த எலினோர் டோனியைப் பேச்சுக்கொடுப்பது போல அணுகிய அந்த இளைஞர், திடீரெனத் தனது பையில் வைத்திருந்த கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார்.
அவர் பயன்படுத்திய கத்தி மற்றும் சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், அவர் தனது பள்ளியில் ஒரு ஆசிரியரைத் தாக்கியதற்காக ஒரு நாள் முன்பே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.










