டொராண்டோ கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபையைச் (TCDSB) சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள James Cardinal McGuigan Catholic Secondary School இல் பணியாற்றிய இந்த ஆசிரியர்கள், மாணவர்களும் பார்க்கக்கூடிய ஒரு இன்ஸ்டாகிராம் குழுவில் கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், இனவாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் உரையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த கிறிஸ்மஸ் விடுமுறையின் போது இடம்பெற்ற இந்த உரையாடல்களை மாணவர் ஒருவர் ஆதாரத்துடன் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த ஆசிரியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தாலும், தற்போது அவர்கள் பணியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளதை சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒன்ராறியோ ஆசிரியர்கள் கல்லூரி (Ontario College of Teachers) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சமத்துவமான சூழலை உறுதி செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக பாடசாலை சபை தெரிவித்துள்ளது.










