ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
அந்த நிதிச் சுமையிலிருந்து மீள நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
அதன்படி, ஒட்டாவா மருத்துவமனை (The Ottawa Hospital) தனது பணியாளர்களில் 3 சதவீதத்தைக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேபோல், லண்டன் ஹெல்த் சயின்சஸ் சென்டர் (London Health Sciences Centre) சுமார் 200 செவிலியர் பணியிடங்களையும், சத்தம்-கென்ட் ஹெல்த் அலையன்ஸ் (Chatham-Kent Health Alliance) 49 பணியிடங்களையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
மாகாண அரசு இந்த ஆண்டு 1.1 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கிய போதிலும், மருத்துவமனைகளின் தேவை அதைவிட இருமடங்காக உள்ளது.
இதனால் பல மருத்துவமனைகள் தங்களது அவசர சேமிப்பு நிதியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே அடுத்த மூன்று ஆண்டுகளில் வரவு-செலவுத் திட்டத்தைச் சமநிலைப்படுத்துமாறு மருத்துவமனைகளுக்குச் சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் (Sylvia Jones) உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாற்றங்கள் நோயாளிகளுக்கான சேவையைப் பாதிக்காது என அரசு கூறினாலும், எதிர்க்கட்சிகள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
செவிலியர் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கூறுகையில், “ஒவ்வொரு பணியாளர் குறைப்பும் நேரடியாகப் நோயாளி பராமரிப்பைப் பாதிக்கும்” என்றும், அரசு முன்னுரிமை அளிக்க வேண்டிய சுகாதாரத் துறையை விடுத்து வேறு விடயங்களில் நிதி செலவிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்வு போன்றவை மருத்துவமனைகளின் இந்த நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.










