2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிராம்ப்டனில் (Brampton) இடம்பெற்ற கோர விபத்தில் கரோலினா சியாசுல்லோ (Karolina Ciasullo) மற்றும் அவரது மூன்று பிஞ்சு மகள்கள் பரிதாபகரமாக பலியாகினர்.
இந்த வழக்கில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிராடி ராபர்ட்சன் (Brady Robertson) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஒன்ராறியோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தனக்கு வழங்கப்பட்ட 17 ஆண்டு சிறைத் தண்டனை மிக அதிகம் என்றும், போதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் சட்ட வரம்புகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் ராபர்ட்சன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை நிராகரித்த தலைமை நீதிபதி மைக்கேல் துல்லோக் (Michael Tulloch), இரத்தத்தில் உள்ள THC (கஞ்சா போதைப்பொருள்) வரம்பு சட்டபூர்வமானது என்றார்.
நான்கு உயிர்களைப் பறித்த இந்தச் சம்பவத்தில் வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது என்றும் அவர் தீர்ப்பளித்தார்.
விபத்து நடந்த அன்று ராபர்ட்சன் உரிமம் மற்றும் காப்பீடு இன்றி அதிவேகமாக வாகனம் ஓட்டியருந்ததுடன், அவரது இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 8 மடங்கு அதிக THC இருந்ததும் கண்டறியப்பட்டது.
அதேபோல் காரில் போதை மாத்திரைகள் இருந்ததும் உறுதியானது.
மேலும், விபத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் மற்றொரு விபத்தை ஏற்படுத்தி பொலிஸாரிடமிருந்து தப்பியோடியதும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 6, 3, 1 வயதுடைய மூன்று சிறுமிகளின் மரணம் கனடா முழுவதையும் உலுக்கியது.
“இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு ராபர்ட்சனின் பொறுப்பற்ற தனமே காரணம்” என நீதிபதி தனது தீர்ப்பில் வலியுறுத்தினார்.










