கனடாவின் பர்லிங்டன் (Burlington) நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபர் ஒருவருக்கு, சுத்தமற்ற ஊசி பயன்படுத்தப்பட்டதால் ‘ஹெபடைடிஸ் சி‘ (Hepatitis C) தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி 5 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Darwin Allen என்ற நோயாளி, Halton Family Health Centre மற்றும் மருத்துவர் Timothy Salter ஆகிய தரப்புக்களுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்திற்காகச் சிகிச்சை பெறச் சென்றபோது, இவருக்குச் சுத்திகரிக்கப்படாத ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு பொதுச் சுகாதாரத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்ட போதே, இவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்றும், உரிய மருத்துவத் தரநிலைகள் பின்பற்றப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.










