கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர் ஒருவர், பொலிஸாரின் துரத்தலுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இச் சம்பவத்தில், அந்த நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட கனடிய பொலிஸ் அதிகாரி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
கௌட்ஸ் (Coutts) எல்லை வழியாக கனடாவிற்குள் நுழைய முயன்ற அமெரிக்க நபர், சோதனைக்கு நிற்க மறுத்துத் தப்பி ஓடினார்.
அவர் மீது அமெரிக்காவில் துப்பாக்கி திருட்டு மற்றும் பொலிஸாரைத் தாக்கிய வழக்குகள் நிலுவையில் இருந்தன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிவேகமாக (140-150 கி.மீ) வாகனத்தைச் செலுத்தி தப்பி ஓடிய அந்த நபர், தனது தலைக்கு நேராகத் துப்பாக்கியை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பலமுறை பொலிஸார் வாகனத்தைத் தடுக்க முயன்றும் அவர் நிற்கவில்லை.
இறுதியாக வாகனம் ஒரு பள்ளத்தில் விழுந்த பிறகு ஓட்டம் பிடித்த அவரைப் பொலிஸார் துரத்தினர்.
ஒரு பொலிஸ் அதிகாரி அவரை நோக்கி ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர், பொலிஸ் நாய் அவரைப் பிடிக்க முயன்றபோது, அந்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆல்பர்ட்டா தீவிர சம்பவங்கள் பதில் குழு (ASIRT), துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் செயல் நியாயமானது, அவசியமானது மற்றும் தகுதியானது என்று முடிவெடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தது.
மரணத்திற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் மது மற்றும் பல்வேறு போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.










