எட்மன்டன் (Edmonton) நகரில் தெற்காசிய சமூகத்தினரை இலக்கு வைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கிய தலைவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 22 வயதுடைய நபர் இந்த கும்பலின் ‘உள்ளூர் சூத்திரதாரி’ (Local ringleader) என பொலிசார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்துவதை விட, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சம்பந்தப்பட்டவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கே எட்மன்டன் பொலிஸார் (EPS) முன்னுரிமை அளித்துள்ளனர்.
கனடா எல்லை சேவைகள் முகமையுடன் (CBSA) இணைந்து நடத்தப்பட்ட இந்த விசாரணையில், மேலும் மூவர் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இவர்களுக்கு கால்கரி (Calgary), ஒன்ராறியோ (Ontario) மற்றும் பி.சி. (B.C.) ஆகிய பகுதிகளிலும் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து இக்கும்பல் ஆட்சேர்ப்பு செய்வதாகவும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் எதிர்காலத்தைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் பொலிஸ் அதிகாரி ரோபிந்தர் கில் (Supt. Robinder Gill) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மிரட்டல்களுக்கு உள்ளாகும் நபர்கள் உடனடியாக பொலிசாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










