உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முடக்கியிருப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) கண்டனம் தெரிவித்துள்ளார்.
துருக்கி (Turkey) நாட்டுக்கான பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் ஈரானின் இந்த கடல்வழி முடக்கம் ஆகிய இரண்டுமே சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்ற பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) கருத்தை அனிதா ஆனந்த் வழிமொழிந்துள்ளார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதையூடாகவே நடப்பதால், இந்த முடக்கத்தினால் எரிபொருள் விலை உயர்ந்து ஏழை நாடுகளின் உணவு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மோதலில் கனடா நேரடியாக இராணுவ ரீதியில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும், தூதரக ரீதியிலான தீர்வுகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.










