அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள இறக்குமதி வரிகளை (Tariffs) எதிர்கொள்ளவும், புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டவும் கனடா சில வலுவான காரணிகளைத் தனது பிடியில் வைத்துள்ளது.
அமெரிக்கா தனது எரிசக்தி தேவையில் பெரும்பகுதியை கனடாவையே நம்பியுள்ளது. குறிப்பாக, ஈரானுடனான போரினால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், கனடாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிற்கு மிக அவசியமானது.
கனடிய ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) அமெரிக்கத் தொழில்துறையில் சுமார் 733 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளன. இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் கனடாவின் செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது.
அதேபோல் சீனாவை எதிர்க்க அமெரிக்காவிற்குத் தேவைப்படும் முக்கிய தாதுக்களின் சுரங்க மையமாக கனடா திகழ்கிறது.
இதனை ஒரு பேரம் பேசும் கருவியாக (Bargaining chip) கனடா பயன்படுத்த வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் 88 F-35 போர் விமானங்களை வாங்கும் 28 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை கனடா மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற எதிர்வுகூறல்கள் காணப்படுகின்றன.
வரிகளை நீக்கினால் மட்டுமே இந்த ஒப்பந்தம் முழுமையடையும் என கனடா நிபந்தனை விதிக்கலாம்.
மேலும், கனடா சீனாவுடன் சில வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வது, அமெரிக்காவிற்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வரப்போகும் இடைக்காலத் தேர்தல்கள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணிகளும் கனடாவிற்குச் சாதகமாக அமையக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.










