ஒன்ராறியோவின் விட்பி (Whitby) பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று காட்டு ஓநாய் (Coyote) ஒன்று கடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கொரோனேஷன் ரோடு (Coronation Road) மற்றும் ரோஸ்லாண்ட் ரோடு (Rossland Road) சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு பொதுத் திடலில், காடுகளையொட்டிய மரவரிசைகளுக்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸ் (Durham Regional Police) அதிகாரி நிக் கிளக்ஸ்டைன் (Nick Gluckstein) தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறு குழந்தை (Toddler) முதலில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் றொரண்டோ (Toronto) பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அக்குழந்தையின் நிலை சீராக (Stable condition) உள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் காட்டு ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் “விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும்” இருக்குமாறு பொலிஸார் எக்ஸ் (X) தளத்தில் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக சிறு குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளுடன் பொது இடங்களைப் பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காட்டு ஓநாய்கள் பொதுவாக அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் என்றும், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் அவை ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆபத்தான அல்லது அசாதாரணமான முறையில் நடமாடும் ஓநாய்களைக் கண்டால் உடனே உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும், அவசர ஆபத்து காலங்களில் 911 என்ற எண்ணை அழைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










