பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணவீக்கம் உயர்வு – விலைவாசி மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வரும் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிசக்தி மற்றும் பெற்றோல் விலைகள் அதிகரித்துள்ளதே இந்த பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

பெப்ரவரி மாதம் 1.7 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மெர்ச்சண்ட் குரோத் (Merchant Growth) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஜென்ஸ் (David Gens) கூறுகையில், எரிசக்தி செலவுகள் அதிகரிக்கும் போது சிறு வணிகங்கள் பெரும் சுமையை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.

வருவாயைக் கொண்டு தொழிலை நடத்த முடியாமல், கடன்களை நம்பி தொழிலை முன்னெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்திய ஆய்வின்படி, பாதிக்கும் மேற்பட்ட சிறு வணிகங்கள் வரும் மாதங்களில் தமது பொருட்களின் விலைகளை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஹாஷெம் அபுல்ஹோசன் (Hashem Aboulhosn) தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போர் நீண்ட காலம் தொடருமானால், எரிசக்தி விலை உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா மற்றும் வர்த்தகப் போரினால் பாதிக்கப்பட்ட வணிகங்கள், தற்போது இந்த புதிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க திணறி வருகின்றன.

 

Related Articles

Latest Articles