பதினைந்து வயது மாணவி ஒருவர் மீது எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய 16 வயது சிறுமிக்கு, நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த தண்டனை விதித்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த போது குறித்த சிறுமிக்கு 14 வயதெனவும், இச்சம்பவம் சமூகத்தில் பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Krista Zerr, தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாஸ்கடூனில் உள்ள Evan Hardy Collegiate பாடசாலையில் கல்வி கற்ற குறித்த சிறுமிக்கு ஒட்டிசம் (Autism) மற்றும் தீ வைப்பதில் அதீத ஆர்வம் காட்டும் மனநிலை (Pyromania) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், அவர் இரண்டு ஆண்டுகள் சிறைக்காவலிலும், ஒரு ஆண்டு சமூகக் கண்காணிப்பிலும் இருந்து தீவிர மறுவாழ்வு மற்றும் சிகிச்சைத் திட்டத்தின் (IRCS) கீழ் சிகிச்சை பெறுவார்.
பாதிக்கப்பட்ட மாணவி எட்மன்டனில் உள்ள விசேட தீக்காயப் பிரிவில் மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றார்.
தண்டனை வழங்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கண்ணீர் மல்க நீதி கோரினார்.
ஏற்கனவே அந்த மாணவி அச்சுறுத்தப்படுவதாகப் பாடசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்திருந்த போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.










