கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (P.E.I.), வீட்டை விட்டு வெளியேறி ஆபத்தான சூழலில் வாழும் சிறுவர்களைப் பொலிஸார் மீட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்க வழிவகை செய்யும் புதிய சட்டமூலத்திற்காகத் தாய்மார்கள் போராடி வருகின்றனர்.
ஷார்லட்டவுன் (Charlottetown) பகுதியைச் சேர்ந்த ஜேனா பேங்க்ஸ் (Jena Banks) என்பவரின் 13 வயது மகள், தவறான சகவாசத்தால் கடந்த ஒன்பது மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் வசித்து வருகிறார்.
பொலிஸார் அவரை நேரில் கண்டாலும், கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர தமக்கு சட்ட அதிகாரம் இல்லை எனக் கூறுவதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்டப்படி, ஒரு சிறுவர் குற்றம் செய்யாதவரை அல்லது மனநலப் பாதிப்பு இல்லாதவரை அவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர முடியாது.
இந்தச் சட்ட இடைவெளியை நிரப்ப சட்டமன்ற உறுப்பினர் கரோலின் சிம்சன் (Carolyn Simpson) Bill 103 எனும் சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.
இது நிறைவேற்றப்பட்டால், ஒரு சிறுவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால், நீதிமன்ற உத்தரவு மூலம் அல்லது அவசர காலங்களில் பிடியாணை இன்றியும் பொலிஸார் அந்தச் சிறுவரை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கோ அல்லது பெற்றோரிடமோ ஒப்படைக்க அதிகாரம் கிடைக்கும்.
ஜேனட் பெய்ன் (Janet Payne) எனும் பேராசிரியரும் தனது 13 வயது மகன் போதைப்பொருள் மற்றும் திருட்டுப் பழக்கங்களுக்கு ஆளாகி வீட்டை விட்டு ஓடியுள்ளதாகத் தெரிவித்து, இந்தச் சட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளார்.
இந்தச் சட்டம் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இருப்பினும், “பெற்றோரின் கைகள் கட்டப்பட்டுள்ளன, பிள்ளைகளைக் காப்பாற்ற இந்தச் சட்டம் மிக அவசியம்” எனப் போராட்டக் குழுவினர் வாதிடுகின்றனர்.
தற்போது இந்தச் சட்டமூலம் சட்டமன்றத்தில் விவாதத்தில் உள்ளது. இது தொடர்பான மேலதிக முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
