றொரண்டோ பியர்சன் (Toronto Pearson) சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கம் மற்றும் பணத் திருட்டு வழக்கில் தொடர்புடைய 44 வயதுடைய அர்சலான் சவுத்ரி (Arsalan Chaudhary) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் (Brampton) நீதிமன்றம் நேற்று இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியதுடன், திருடப்பட்ட 22 மில்லியன் டொலர் தொகையைத் திருப்பிச் செலுத்த அவருக்கு 40 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளது.
2023 ஏப்ரல் 17 அன்று சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) நகரிலிருந்து வந்த விமானத்தில் இருந்த 400 கிலோ தங்கம் மற்றும் 2.5 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் மாயமானது.
துபாயிலிருந்து (Dubai) கனடா திரும்பியபோது கைது செய்யப்பட்ட சவுத்ரி, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
திருடப்பட்ட தங்கம் உருக்கப்பட்டு, சட்டவிரோத ஆயுதக் கொள்முதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் நம்புகின்றனர்.
இந்த வழக்கில் ஏர் கனடா (Air Canada) முன்னாள் ஊழியர் உட்பட மேலும் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
தற்போதைய விசாரணையில் ஒரு கிலோ தங்கம், தங்கம் உருக்கும் உபகரணங்கள் மற்றும் பல இலட்சம் டொலர் பணம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










