கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் (York Region) நள்ளிரவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் மார்க்கம் (Markham) பகுதியில் உள்ள லீ அவென்யூ (Lee Avenue) இல்லம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அடுத்த இரண்டு மணித்தியாலங்களில், அதிகாலை 3:30 மணியளவில் ஆவரா (Aurora) பகுதியில் உள்ள வெலிங்டன் ஸ்ட்ரீட் (Wellington Street) இல்லம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிக் குண்டுகள் தீர்க்கப்பட்டன.
ஆவரா (Aurora) சம்பவத்தின் போது, இரண்டு அல்லது மூன்று பள்ளிச் செல்லும் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 முதல் 5 பேர் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.
எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு சம்பவங்களிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சந்தேக நபர்கள் குறித்த விபரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
