கனடாவில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலையை அமைக்கும் திட்டத்தை ஹொண்டா (Honda Motors) நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால், வட அமெரிக்காவில் தனது கவனத்தை ஹைபிரிட் (Hybrids) வாகனங்கள் பக்கம் திருப்ப ஹொண்டா முடிவு செய்துள்ளது.
உலகளாவிய வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்க வரி விதிப்பு கொள்கைகளால் வாகன உற்பத்தியாளர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கனடிய தொழில் அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதமே இத்திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக ஹொண்டா அறிவித்திருந்தது.
சந்தை நிலவரத்தை அவதானித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அதன் தலைமை நிர்வாகி தோஷிஹிரோ மிபே (Toshihiro Mibe) அப்போது குறிப்பிட்டிருந்தார்.
2028 ஆம் ஆண்டு முதல் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆலை குறித்து, தற்போது மேலதிக தகவல்கள் எதுவும் இல்லை என ஹொண்டா கனடா (Honda Canada) தெரிவித்துள்ளது.
வரி அழுத்தங்களைக் குறைப்பதன் மூலமும், எரிபொருள் சிக்கனமான வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும் வாகனத் துறைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் ஜோலியின் அலுவலகம் உறுதியளித்துள்ளது.
மின்சார வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாகப் பல முன்னணி நிறுவனங்கள் தமது முதலீடுகளைக் குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
