ஒன்ராறியோ பொதுப் போக்குவரத்தில் போதைப்பொருள் பயன்பாடு – கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தார் டக் போர்ட்!

ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுக்கக் கடுமையான புதிய விதிகள் கொண்டுவரப்படவுள்ளதாகப் முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அறிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் டக் போர்ட் (Doug Ford) திங்கட்கிழமை காலை தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தில் போதைப்பொருள் உட்கொள்பவர்களை அங்கிருந்து வெளியேற்ற அல்லது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரிகளுக்கு (Special constables) கூடுதல் அதிகாரங்களை வழங்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.

சுரங்கப்பாதைகளில் (Subways) மக்கள் பகிரங்கமாகப் போதைப்பொருள் பயன்படுத்துவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளதாகவும், இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

அரசின் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ள அதேவேளை, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சமூக ரீதியான ஆதரவுத் திட்டங்களும் அவசியம் எனப் போக்குவரத்து ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விரிவான விளக்கங்களை ஒன்ராறியோவின் சொலிசிட்டர் ஜெனரல் மைக்கேல் கெர்ஸ்னர் (Michael Kerzner) இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் அச்சமின்றிப் பயணங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த புதிய விதிகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles