வான்கூவர் நகரில் இருந்து கார் மூலம் அமெரிக்காவிற்குப் பயணம் செய்த சீன மாணவர் ஒருவர், அதிமுக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க இராணுவ விமானங்களைச் சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் எப்.பி.ஐ (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தில் கல்வி பயிலும் 21 வயதான தியான்ருய் லியாங் (Tianrui Liang) என்ற சீன மாணவர், ஏப்ரல் 7 அன்று நியூயார்க் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற முயன்றபோது அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
நெப்ராஸ்காவில் (Nebraska) உள்ள ஓபுட் விமானப்படைத் தளத்திற்கு அருகே, அமெரிக்க அதிபரின் அவசர காலக் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும் “டூம்ஸ்டே பிளேன்” (Doomsday Plane) மற்றும் உளவு விமானங்களை அவர் புகைப்படம் எடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வான்கூவர் நகருக்கு விமானம் மூலம் வந்திறங்கிய லியாங், மார்ச் 28 அன்று கார் மூலம் வாஷிங்டன் மாநில எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.
இந்தச் செயல் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் அணு ஆயுதத் தடுப்பு மற்றும் ஏவுகணைப் பாதுகாப்புப் பிரிவின் முக்கியத் தளமாக இந்த ஓபுட் விமானப்படைத் தளம் (Offutt Air Force Base) விளங்குவது குறிப்பிடத்தக்கது.










