கனடாவின் யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) ‘புரொஜெக்ட் ஹோல்சேல்’ (Project Wholesale) என்ற பெயரில் மூன்று மாத கால விசேட அதிரடி திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஒன்ராறியோவின் பிக்-பாக்ஸ் (Big-box) எனப்படும் பெருவணிக வளாகங்கள், மதுபானக் கடைகள் மற்றும் வன்பொருள் (Hardware) விற்பனை நிலையங்களில் அரங்கேறும் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 1 முதல் செப்டம்பர் 1 வரை நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் கீழ், அரோரா (Aurora) மற்றும் நியூமார்க்கெட் (Newmarket) உள்ளிட்ட பகுதிகளில் குற்றங்கள் அதிகம் நிகழ வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்ட வணிக இடங்களில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சில்லறை வர்த்தகக் கொள்ளைகள் என்பது தற்போது தனிநபர் சார்ந்த சாதாரண திருட்டுகளாக இல்லாமல், திட்டமிட்ட குற்றக் குழுக்களின் பாரிய நெட்வொர்க்காக உருவெடுத்துள்ளதாகக் காவல் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய கொள்ளைச் சம்பவங்களின் போது ஊழியர்களுக்கு எதிராக ஆயுதப் பிரயோகம் மற்றும் வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதாகவும், திருடப்படும் பொருட்கள் சட்டவிரோத சந்தைகளில் விற்கப்படுவதாகவும் கனடாவின் சில்லறை வர்த்தகக் கவுன்சிலின் (Retail Council of Canada) ஆலோசகர் ரூய் ரோட்ரிக்ஸ் (Rui Rodrigues) தெரிவித்துள்ளார்.
வணிக நிறுவனங்களின் தரவுகளின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் இவ்வாறான சில்லறை வர்த்தகக் குற்றங்களால் சுமார் 9.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுகளை விட மிக அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










