கனடாவில் பல இலட்சம் டொலர் மதிப்புள்ள வணிகக் காசோலைகள், சமூக அஞ்சல் பெட்டியிலிருந்து (Community Mailbox) திருடப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டு மோசடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ‘லைவ் எலெக்ட்ரிக்’ (Live Electric) தெரிவித்துள்ளது.
இது ஒன்ராறியோவின் கேம்பிரிட்ஜ் (Cambridge, Ont) பகுதியைச் சேர்ந்த மின்சார ஒப்பந்த நிறுவனமானமாகும்.
இச்சம்பவம் குறித்து வாட்டர்லூ பிராந்திய பொலிஸாரும் (Waterloo Regional Police Service), கனடா போஸ்ட்டும் (Canada Post) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய பணம் வராததால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாக நிறுவனத்தின் தலைவர் டான் ஹோவர்ட் (Dan Howard) தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 6 முதல் 7 காசோலைகள் திருடப்பட்டுள்ளதாகவும், சில காசோலைகளின் மதிப்பு ஒரு கால் மில்லியன் டொலர் வரை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசோலைகளில் உள்ள பெயர்கள் மிகவும் தெளிவாக மாற்றப்பட்டு, போலியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்பகுதியில் உள்ள சமூக அஞ்சல் பெட்டியின் பூட்டுகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததை கனடா போஸ்ட் (Canada Post) உறுதிப்படுத்தியுள்ளதுடன், தற்போது அங்கு புதிய பூட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வாட்டர்லூ பிராந்தியத்தில் வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்ட இத்தகைய அதிநவீன மோசடிகள் அதிகரித்து வருவதாகக் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த மோசடி காரணமாக, லைவ் எலெக்ட்ரிக் (Live Electric) நிறுவனம் தற்போது அஞ்சல் மூலம் காசோலைகளை அனுப்புவதை நிறுத்திவிட்டு, நேரடியாகக் கைகளில் வழங்கும் முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது.










