குறைந்த மதிப்புள்ள ஏற்றுமதிப் பொருட்களுக்கான புதிய சுங்க விதிமுறைகள் காரணமாக, சில ஐரோப்பிய ஒன்றிய (European Union) நாடுகளுக்கான அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளை கனடா போஸ்ட் (Canada Post) தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
மறுஅறிவிப்பு வரும் வரை ஆஸ்திரியா (Austria), பெல்ஜியம் (Belgium), செக் குடியரசு (The Czech Republic), டென்மார்க் (Denmark), பின்லாந்து (Finland), பிரான்ஸ் (France), ஜெர்மனி (Germany), அயர்லாந்து (Ireland), இத்தாலி (Italy), லக்சம்பர்க் (Luxembourg), போர்ச்சுகல் (Portugal) மற்றும் ஸ்பெயின் (Spain) ஆகிய 12 நாடுகளுக்கான பார்சல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 150 யூரோக்கள் (சுமார் 240 கனடிய டாலர்) வரையிலான பார்சல்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக 3 யூரோக்கள் சுங்க வரியை விதித்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
பல பார்சல்கள் சுங்க வரியைத் தவிர்ப்பதற்காகக் குறைந்த மதிப்பில் தவறாகப் பிரகடனப்படுத்தப்படுவதாகவும், தற்போதைய விதிகள் உள்ளூர் வணிகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த 12 நாடுகளுக்கான புதிய விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய தீர்வுகளை உருவாக்கும் வரை, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பார்சல் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என கனடா போஸ்ட் (Canada Post) குறிப்பிட்டுள்ளது.










